Sunday, September 7, 2014

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

ரேஷன் கடையில் வரிசையில் நின்று மண்எண்னை மற்றும் தீபாவளிக்கு டால்டா வாங்கியவர்கள்;

பஞ்சாயத்து டிவில் ஒலியும் ஒளியும் மற்றும் ஹிந்தி படம் பார்த்தவர்கள்;

வருடம் முழுதும் டவுன் பஸ்ஸில் மட்டுமே சென்றாலும்  குடும்பத்துடன் துணிக்கடை செல்லும் நாட்களில் மட்டும் பந்தாவாக சைக்கிள் ரிக்சாவில் சென்றவர்கள்;

பொருட்காட்சியில் முதன்முதலாக  ஒரு சிக்கன் 65 வாங்கி குடும்பமே பங்கிட்டு சாப்பிட்டவர்கள்;

டூயுவில் சட்டர் போட்ட சாலிடர் டிவி வாங்கி, வரும் ஞாயிறு என்ன படம் என்று  சொல்வார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எதிரொலி பார்த்தவர்கள்;

ஒரு முறை  சென்னை சென்று வந்ததையே வருடம் முழுதும் பேசியவர்கள்;

எஞ்சினியரிங் என்றால் சிவில் எஞ்சினியர் மட்டுமே நினைத்தவர்கள்;

ஐந்து வருடத்திற்கு முன் எழுதி வைத்த போன் கனெக்ஷன் கிடைத்த  மகிழ்ச்சியில் எல்லா சொந்தத்துக்கும் பேசி விட்டு மாத கடைசியில் பில் வந்ததும் போனுக்கு பூட்டு போட்டவர்கள்;

மற்றும் இது போல் பலரை காணவில்லை. இவர்களிடத்தில்  காசு பணமிருந்ததில்லை அதே நேரத்தில் கவலையும் இருந்தததில்லை.

                  இவர்கள் எப்பொழுது முதல் காணாமல் போனார்கள் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. வேலை,பணம், குடும்பம் தேடுதல்  மற்றும் கால ஓட்டங்களில் காணமல் போயிருப்பார்கள் என்று சந்தேகிக்கபடுகிறது, இறுதி 90களில், மற்றும் உலகமயமாக்கல் பொருளாதர வளர்ச்சியில் காணாமல் போயிருக்கலாம் என்ற ஒரு பரவலான கருத்தும் உண்டு. இவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்ற விவரமே வேலை வெட்டி இல்லாத நேரங்களில் அல்லது டிவியில் பட்டிமன்றம் பார்க்கும் போது  மட்டும்தான் தெரிய வரும். மற்ற நேரங்களில் இவர்களை தேடக்கூட ஆள் இருக்காது. இவர்களை  பற்றிய விவரம் அறிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி, அளவுக்கு அதிகமாக பணமிருந்தும் அதை அனுபவிக்க நேரம் கிடைக்காத(அல்லது ஒதுக்காத) எவரிடமும் தெரிவிக்கலாம்.

வீட்டிற்க்கு ரெண்டு கார் இருந்தும், அதில் குடும்பத்தோடு ஊர் சுற்ற நேரமில்லாதவனும்;
பிடித்த உணவை விட பிடிக்காத மாத்திரையை அதிகம் சாப்பிடுபவனும்;
42" இன்ச் டிவி வாங்கியும், அதை பார்க்க நேரமில்லாதவனுக்கும்தான்  இவனை கண்டுபிடிக்க வேண்டியது இப்போது அவசியமாகிறது.

                 இவர்களை தேடுவதை விடுத்து அவர்கள் தொலைந்த காலங்களை தேடுவதை விடுத்து நமது சரியான சந்தோஷம்(நிச்சயம் பணமாக இருக்காது) எது என்று தேடினாலே, தானாக இவர்கள் கிடைப்பார்கள்.


2 comments: