Wednesday, February 18, 2015

ராஜராஜ சோழனுடன் ஜாக்கிங்

இந்த கதையை படித்து முடிக்க சராசரியாக 15 நிமிடங்கள் ஆகும்]

ராஜா ராஜா சோழன் கூட ஜாக்கிங் போனா எப்படி இருக்கும், அப்படித்தான் நேற்றைய காலை ஜாக்கிங்கும் இருந்தது முகிலனுக்கு. நேற்று காலை கூட முகிலன் இதை முழுசா நம்பல, ஆனால் இன்று இரவு ஆள் அரவம் இல்லாத அந்த parkல் இப்பொழுது அதே ராஜ ராஜ சோழனுக்காக காத்துட்டு இருக்கான்.

நேற்று காலை

"ஏம்ப்பா முகிலா இன்னைக்கு இவ்வளவு லேட்..............." காலை ஜாக்கிங்கில் பரிச்சயம் இல்லாத மனிதர்கள் பேசுவது அல்லது சிறு புன்னகை செய்வது இயல்புதான் ஆனா பேரையும் சொல்லி உரிமையா ஏன் லேட்ன்னு கேட்ட உடன் கொஞ்சம் jerk ஆகிட்டான். இருந்தாலும் கொஞ்சம் ஸ்பீட குறைச்சிக்கிட்டு "லேட் ஆயுடுச்சி சார் ன்னு மொக்கையா ஒரு பதில் சொன்னான்". "அப்பா எப்படி இருக்கார்ப்பா" என்ற அடுத்த கேள்வியில் மேலும் குழம்பியவனாய், "அவர் நல்லா இருக்கார் சார், ஆனா நீங்க யாருன்னு தெரியலையே" என்றான். நீ ஜாக்கிங் முடிச்சிட்டு வா, நான் அந்த பென்ச்ல உக்காந்துருக்கேன் என்று இவன் கேள்வியையே கண்டு கொள்ளாதவராய் trackல் இருந்து விலகி ஓரத்தில் இருந்த ஒரு பெஞ்சில் உக்காந்தார்.

இருக்கிற குழப்பத்தில் வழக்கமா ஓடுற distance கூட ஓடல, ரெண்டு ரவுண்டு அடிச்சிட்டு அவர் இருந்த பெஞ்ச் பக்கத்தில் போய் நின்னான். முகிலன் இன்னொரு முறை நீங்கள் யார் என்று கேட்பதற்கு முன்னரே சொன்னார் "நான்தான் அருள்மொழிவர்மன்" கை குலுக்கி ஹலோ சொல்லும் போதே அடுத்த அதிர்ச்சி கொடுத்தார், "சன் ஆஃப் பராந்தக சுந்தர சோழன்".

மேலும் கீழும் ஒரு முறை பார்த்தான், பார்க்க தெளிவாதான் இருக்கார் அப்புறம் ஏன் இப்படி கீழ்பாக்கம் கேஸ் மாதிரி பேசுறார்........"புரியலையே சார் நீங்க யாரு"......

"மேற்க்கே சாலுக்கிய பகுதியையும் தெற்க்கே சிங்களத்தையும் வென்ற அதே ராஜ ராஜன்தான்பா."

அய்யோ நாம நேத்து ராத்திரி ஒன்னும் பொன்னியின் செல்வன் படிக்கலையே........, அவனையே கிள்ளி பாத்துகிட்டான் நிச்சயம் கனவு இல்லை இது. அந்த பெஞ்சை விட்டு விலகி நடந்தான், விடாமல் தூரத்தி வந்த அருள்மொழிவர்மன் நீ நம்பித்தான் ஆகணும்ப்பா என்று பேச்சை தொடர்ந்தார்.......... நம்ம சந்ததியர் எப்படி இருக்கிரார்கள்ன்னு பாக்கலாம்ன்னு வந்தேன், டைம் மெஷினில் தான் வந்தேன்.

டைம் மெஷினா.......டைம் மெஷினில் வேற பீரியடுக்கு போற மாதிரி நிறைய கதைகள் படிச்சிருக்கான், ஆனா அந்த டைம் மெஷினில் ராஜராஜன் தன்னை பார்க்க வந்ததா கனவு கூட கண்டதில்லையே..... நம்பியும் நம்பாமலும், நீங்க எப்படி இங்கிலீஷ்லாம் பேசுறீங்க, tracksuit shoesலாம் போட்டுருக்கீங்க என்றான்.

"ஏன்ப்பா டைம் மெஷின்னு எவ்ளோ பெரிய விஷயம் சொல்லிட்டு இருக்கேன் நீ என்னன்னா tracksuitன்னு சின்னபிள்ள தனமா பேசிட்டு இருக்க". முகிலனுக்கு இந்த பதில கேட்ட உடனே கொஞ்சம் அசிங்கமாயிடுச்சு, ச்ச்ச 1200 வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு ஆளு நம்மள இப்படி அசிங்க படுத்துறாரே............ஐயோ நம்மளை அறியாமல் நாமளே நம்ப ஆரம்பிச்சிட்டோமோ??

நீங்க சொல்லுறத நம்பும்படியா இல்லையே என்றான் முகிலன்; "நான் உன்னோட futureக்கும் போயிட்டு தான் வந்துருக்கேன், அதுல நாளைக்கு நடக்க போற ஒரு விஷயத்த சொன்னா நம்புவியா"??

இதில் கொஞ்சம் logic இருப்பதாய் நினைத்து சரி சொல்லுங்க பாப்போம் என்றான்.

"நீ நாளை முதல் ABC Corp க்கு வேலைக்கு செல்வாய். அவ்வாறு நடந்தால் நாளை இரவு இதே பார்கில் இருப்பேன் வந்து பார்" சொல்லி விட்டு விறு விறு என்று ஓடி மறைந்தார்.

இவ்வளவு நேரம் நடந்த விஷயங்களில் குழம்பி இருந்தாலும், கடைசியாய் சொன்ன விஷயம் இம்மியளவு கூட நடக்க வாய்ப்பு இல்லாதலால், ஏதோ புத்தி பிசகிய ஒருவன் நம் காலை ஜாக்கிங்கை கெடுத்து விட்டான் என்று குழப்பமின்றி நடக்க ஆரம்பித்தான்.

வீடு வரை நடந்து வரும் போது பல யோசனைகள், யாரோ ஒருவன் எப்படி நம்முடைய பெயர்  அழைக்க முடியும். அதுவும்  உருவத்தையும் பேசிய தெளிவையும் வைத்து பார்க்கும் பொழுது பைத்தியம் போல் தெரியவில்லையே. ஆனால், அவர் சொல்வது போல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. XYZ Corpல் வேலைக்கு சேர்ந்து இந்த 12 வருடத்தில் வேறு எந்த ஒரு வேலைக்கும் விண்ணப்பித்தே இல்லை, அதுவும் இந்த ABC Corp  தன் XYZ Corp ன் போட்டி கம்பெனி என்ற காரணத்தினால் இந்த கம்பெனிக்கு மாறும் எண்ணம் இருந்ததே இல்லை.

காலை பார்க்கில்  நடந்த விஷயங்களை வீட்டில் அகல்யாவிடம் கூட சொல்ல வில்லை, சொன்னால் என்ன நினைப்பாள்.......இவருக்கு மூளை குழம்பிடுச்சின்னு சொல்லி ஊர்ல இருந்து எல்லாரையும் வர வச்சிருவா. இருந்தாலும் கேட்டே விட்டாள் அவள் "என்னங்க லூசு மாதிரி எங்கயோ பாத்துட்டு ஏதோ யோசிச்சிட்டு இருக்கீங்க....."; வேறு வழி இல்லாமல் நடந்ததை சொன்னான் முகிலன். "நினைச்சேன், நீங்க book exhibitionல இருந்து இவ்ளோ சுஜாதா புக்ஸ் வாங்கிட்டு வந்து படிக்கும் போதே இப்படி ஏதாவது ஆகும்ன்னு நினைச்சேன்". மனைவியின் இந்த பதிலை எதிர் பார்க்காத முகிலன் அவசரமாக இட்லியை முழுங்கி விட்டு ஆபீஸ்க்கு கிளம்பி ஓடினான்.

ஆபிஸ் வந்தது முதல் அதிக வேலை, நேற்று இரவு ரிலீஸ் செய்த சாப்ட்வேரில் நிறைய பிரச்சனைகள் இருந்தது என்று ஏகப்பட்ட மீட்டிங்கள், மீண்டும் ஒரு சாப்ட்வேர் இன்றே ரிலீஸ் செய்யணும்னு நிக்கிறான் அமெரிக்காகாரன். "டேய் ஒருமாசம் டைம் எடுத்து ரிலீஸ் பண்ணுன சாப்ட்வேர்க்கே ஓர் ஆயிரம் பிரச்சனை, இதுல எப்படிடா உடனே ரிலீஸ் பண்ணுறது" ஒரு வழியா அவன சமாளிச்சு ஒரு வாரம் டைம் வாங்கியாச்சு. இந்த பிரச்சனைகளுக்கு இடையில் காலையில் இருந்து வந்த மெயில் ஒன்றும் படிக்கலை, சரி பரவாயில்லை, நாளை காலை பார்க்கலாம் என்று close பண்ணும் பொழுது ஒரு subject lineஐ படிக்கும் போதே கால்கள் வலுவிழந்தன. "Welcome to ABC Corp"............ பதட்டத்தை சரி செய்து கொண்டு, மீண்டும் இடத்தில் உட்கார்ந்து மெயிலை ஓபன் பண்ணி படிக்க படிக்க தலை கிர்ரென்று சுத்தியது.

"Dear Employees,

As per the ABC Corp's acquisition of XYZ Corp, ......................."

அப்படி என்றால் நான் நாளை முதல் ABC Corp employee, அதை விட முக்கியம் இன்று காலை நம்மிடம் பேசியது ராஜராஜ சோழனே. இதை நினைக்க நினைக்க படபடப்பு  கூடியது முகிலனுக்கு. வேண்டாம் இதை அகல்யாவிடம் சொல்லவே வேண்டாம், சொன்னால் கட்டாயம் மயக்கம் போட்டு விடுவாள். அன்று இரவு, மறுநாள் காலை பார்க், ஆபீஸில் நேரத்தை கடத்துவது யுகத்தை கடத்துவது போல் இருந்தது முகிலனுக்கு. சாயந்திரம் ஐந்து மணிக்கே பார்க்கிற்கு வந்து விட்டான், ஒவ்வொரு பெஞ்சா மாறி மாறி உக்காந்து ராஜராஜ சோழனை எதிர்பார்த்து இருந்தான் முகிலன்.

இப்பொழுது(இன்று இரவு) 

சரியாக ஏழரை மணிக்கு ராஜராஜன் வந்தார். முகிலன் அவரிடம் சார், உங்களை சார்ன்னு கூப்பிடலாமா அல்லது அரசேன்னு கூப்பிடவா. வேணாம்பா சும்மா சார்ன்னு கூப்பிடு.....நீங்கள்லாம் இப்ப குடியரசுல இருக்கீங்க, நானெல்லாம் உங்களுக்கு அரசன் கிடையாது.

தொடர்ந்து நிறைய கேள்விகள், சார் எப்படி அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை வென்றீர்கள், அந்த காலத்துலயே எப்படி அவ்வளவு பெரிய கோபுரத்தை கெட்டுனங்க, அது சரி டைம் மெஷினே கண்டு பிடிச்சிருக்கீங்க அப்புறம் கோபுரம் எல்லாம் ஈஸி தான். எதுக்கு இப்ப இங்க வந்தீங்க, எதுக்கு குறிப்பா என்னை செலெக்ட் பண்ணீங்க?? எல்லா கேள்விகளுக்கும் புன்னகையை மட்டுமே பதிலாக உதிர்த்து, முகிலனின் படபடப்பு குறைய காத்திருந்தார்.

முதல்நாள் பேசியது போலே தெளிவான குரலில் பேச ஆரம்பித்தார், உன்னையும் இந்த இடத்தையும் தேர்ந்தெடுத்தது முறையில்லா வரிசை முறைப்படியே முடிவெடுத்தோம். முகிலனின் முகத்தில் குழப்ப ரேகையை படித்தவராய், அதான்ப்பா ரேன்டம் நம்பர் மூலமே உன்னை பார்க்கலாம் என்று தேர்ந்தெடுத்தோம். என்னை பொறுத்த வரை அந்த காலம், இந்த காலம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை எல்லாமே நிகழ் காலம்தான். அனைத்து நிகழ்வுகளும் நிகழ் காலம்தான், மனிதன் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இயற்கையின் வேகத்தில் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறான், அதே மனிதன் இயற்க்கை வேகத்தை மீறி முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்ல முடிந்தால் அவன் தான் காலம் வென்ற கால இயந்திரம் ஆவான். முகிலனுக்கு ராஜராஜனுடன் இருக்கிறோம் என்பதில் இருந்த குழப்பத்தை விட அவர் சொன்ன தியரி ரொம்ப குழப்பமாக இருந்தது. மேலும் அவரே தொடர்ந்தார், அதாவது நாம் இப்பொழுது ஒரு பத்து நிமிடமாக பேசி கொண்டிருக்கிறோம், முதல் நிமிடம் பேசிய விஷயங்கள் இறந்த காலம் என்பாய் நீ, ஆனால் அந்த முதல் நிமிடமும் நிகழ் காலமே எனக்கு, ஏனென்றால் அந்த நிமிடங்கள் எங்கும் செல்ல வில்லை அது அங்கேயேதான் இருக்கிறது. அதை உணர்வதற்குரிய வாய்ப்பு நமக்கு அந்த தருணம் மட்டுமே தர பட்டது, அந்த வாய்ப்பை தேவையான நேரத்தில் பெற முடிந்தால் அவன்தான் கால இயந்திரம். சுருக்கமாக சொன்னால் நிகழ்வுகளை அழிக்க முடியாது, அதை மறைக்க மட்டுமே முடியும், அந்த மறைக்கும் பொருள் தான் காலம்.

என்ன சார், ஏதோ எல்லா விசயங்களும் protected folderல தான் இருக்கும், சூப்பர் யூசர் அட்மின் மட்டும் வாங்கிட்டா போதும் திருப்பி திருப்பி dataவ பாத்துக்கலாம்னு மாதிரி சிம்பிளா சொல்றீங்க. நீங்க சொல்லுறத பாத்தா, எதிர் காலம்ன்றதும் இப்பயே நடந்துகிட்டேதான் இருக்கு நாம தான் இன்னும் அந்த காலத்தை பார்க்க தகுதி பெறலைன்னு சொல்றீங்க கரெக்டா??

மிகவும் சரி.....என்னிடம் அந்த காலங்களுக்கு செல்ல வேண்டிய password இருக்கிறது.

ஓ, அப்படின்னா மார்ச் 29 2015 ஆம் தேதி நடக்க போறத கூட இப்ப தெரிஞ்சிக்கலாமா சார்??  2015 என்னப்பா 2800ல நடக்க போற விஷயத்தை கூட தெரிஞ்சிக்கலாம், ஆனா எதுக்கு 29 மார்ச்ன்னு  அந்த ஒரு தேதிய முக்கியமா கேக்குறப்பா?? சார், அது வந்து கிரிக்கெட் வேர்ல்ட் கப் பைனல் நடக்குற நாள், அன்னைக்கு மேட்ச்ல யார் ஜெயிச்சி கப் வாங்குறாங்கன்னு தெரிந்ச்சிகலாம்ன்னு தான்........என்று வழிந்துகொண்டே இழுத்தான் முகிலன்.

ரிசல்ட் தெரிஞ்சிகிறது என்ன, நீ ஏன் கூட வந்து அந்த மேட்சே பார்க்கலாம். முகிலனால் தன் காதுகளை நம்ப முடியவில்லை, "நானும் டைம் மெஷினில் பயணிக்கலாமா, அதுவும் நடக்க போற வேர்ல்ட் கப்பே பாக்கலாமா", கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே சரி என்றான். நீ உட்கார்ந்திருக்கும் அதே பொசிசனில் உன் இடது உள்ளங்கையை என் வலது உள்ளங்கையில் வைத்து இந்த 18 மந்திரங்களையும் சொல் அதன் பின் இரண்டாவது நிமிடத்தில் ஆஸ்திரேலியா மெல்பெர்ன் மைதானத்தில் நாம் இருவரும் மேட்ச் பார்த்து கொண்டிருப்போம்.

முகிலனுக்கு தலை கால் புரியவில்லை, மனதிலே ஆயிரம் எண்ணங்கள், இன்றே 45 நாட்கள் கழித்து நடக்க இருக்கும் ஃபைனல் பார்க்கலாம். திரும்பி வந்து நண்பர்களிடத்தில் யார் கப் வெல்வார்கள் என்று பெட் கட்டலாம், அய்யோ யாரும் புக்கிகள் இந்த விஷயமறிந்து நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தால்..., யாரிடமும் சொல்ல கூடாது, அகல்யாவிடம் மட்டும் சொல்லலாமா??, வேண்டாம், அவளிடம் சொல்வதும் ஒண்ணுதான் facebook அல்லது whatsappல் போடுவதும் ஒண்ணுதான்........  "ம்ம் கவனம், நான் சொல்வதை தவறில்லாமல் திரும்ப சொல்" என்ற ராஜராஜ சோழனின் குரலால் நினைவலையில் இருந்து  திரும்ப வந்தான்.

மந்திரத்தை சொல்வதற்கு தயாராகி கொண்டான், கண்களை மூடி கொண்டு, அவர் சொல்வதை அப்படியே சொல்லி கொண்டிருந்தான்.........இருந்தாலும் மனக்குரங்கு திரும்ப வேறு எண்ணங்களை எண்ண ஆரம்பித்தது......ஐயோ அகல்யாட்ட கூட சொல்லாம கிளம்பிட்டோமே, ஒரு வேலை திரும்ப வர முடியலைன்னா.....ச்சீ ச்சீ அப்படில்லாம் நடக்காது இவர் ராஜா நம்மள அப்படிலாம் விட்டுற மாட்டாரு, சரி ஒரு வேலை இப்ப அகல்யா call பண்ணா நமக்கு ரிங் வருமா, ஆஸ்திரேலியால airtel எடுக்குமா, ஒரு வேலை அங்க போலீஸ் யாரும் பாஸ்போர்ட் விசா கேட்டாங்கன்னா என்ன பண்ணுறது....ஐயோ இதை எதையும் யோசிக்காம மந்திரத்தை சொல்ல ஆரம்பிச்சிடோமே........இவன் கவனத்தை திருப்ப கைகளில் நறுக்கென்று கிள்ளியது போல் இருந்தது, ரோலர் கோஷ்டரில் சுத்தி பாதியில் தள்ளி விட்டது போல் இருந்தது....மெதுவாக கண்ணை திறந்தான் flood lights கண்ணைக்கூசியது, ஐயோ பிட்ச்சில் மல்லாக்க படுத்து கிடக்கிறோமோ, ச்சீ அம்பயர் பாக்குறதுக்கு முன்னாடி எந்திருச்சி ஓடிருவோம், என்ன ராஜராஜன் வெள்ளை கோர்ட் போட்டு நிக்கிறாரு....யோசித்து கொண்டே எழுந்திருக்கும் போதே அகல்யா தோளில் தட்டி எழுந்திரிக்க விடாமல் தடுத்தாள் .........இவ எப்படி ஆஸ்திரேலியா வந்தாள் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அழுகையுடன் அவள் முப்பாத்தம்மனுக்கு நன்றி சொல்லிகொண்டிருந்தால். ஓ அது flood lights இல்லை, ICUல் சைடில் இருக்கும் விளக்குகள், சுற்றி இரண்டு நர்ஸ்கள் வெள்ளை அங்கி அணிந்தது டாக்டர்...................

"எப்படிங்க இருக்கு இப்ப உடம்புக்கு, ஒரு  வாரமா வேண்டாத தெய்வமில்லை, அந்த ஆத்தா கருணை தான் உங்கள காப்பத்திருக்கு. கோமாவிலிருந்து எந்திரிக்க வச்ச அந்த ஆத்தா மகிமையே தனி தான். இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சா இருந்தா என்ன......, மேட்ச் பாக்கணும் அதனால ஆபீஸ் வர முடியாதுன்னு சொல்லிருக்கணும் அல்லது வேலை தான் முக்கியம்ன்னா, போய் வேலையை பார்க்க வேண்டியதுதான.........அது விட்டுட்டு மேனேஜரை திட்டிகிட்டே ஸ்கோரும் கேட்டுட்டு வண்டிய ஓட்டிட்டு போனா இப்படிதான் தண்ணி லாரில விட்டுட்டு........." அதுக்கு மேல அவளால பேச முடியாம அழுக ஆரம்பிச்சிட்டா.

அடுத்த ஒருவாரம் ஹாஸ்பிடல் லைஃப், சொந்த பந்தங்கள், நண்பர்கள் வருவதும் விசாரித்து விட்டு செல்வதுமாய் இருந்தது. உடம்பும் நல்லா தேறி இருந்தது, நாளைக்கு டிஸ்சார்ஜ்........அலுவலக நண்பன் முகேஷ் வந்து இன்சூரன்ஸ் ஃபார்ம்ஸ், பில்ஸ் எல்லாம் வாங்கி சென்றான். பரவாயில்லை மாப்ள மெடிக்கல் லீவ் இன்னும் extend பண்ணிக்கோ, மெதுவா ஆபீஸ் வா என்று சொல்லி கெளம்பினான், செல்லும் போது ஏதோ ஞாபகம் வந்தவனாய், டேய் மாப்ள நம்ம கம்பெனியை  நேத்து ABC corp வாங்கிட்டாங்க டா............

Friday, January 16, 2015

1000 ரூபாய் நாணயம்

[இந்த கதையை படித்து முடிக்க சராசரியாக 13 நிமிடங்கள் ஆகும்]

அமெரிக்காவில் பிறந்ததனால் பாதி அமெரிக்கனாகவும், பெர்மனெண்ட் ரெசிடென்ட்சிப் வாங்கியும் இன்னும் இந்திய பாஸ்போர்ட் கேன்சல் பண்ணாத பெற்றோரால் மீதி இந்தியனாகவும் இருக்கும் இனியனுக்கு, தான் அமெரிக்க இந்தியனாக இருப்பதில் இந்த முப்பத்தேழு வருடத்தில் முதல் முறையாக பெருமையாக இருந்தது.

பள்ளிக்கரணையில் இருக்கும் "சென்டர் ஃபார் விண்ட் எனர்ஜி டெக்னாலஜியில்" இருந்து சிறப்பு வேலை அழைப்பு வந்ததற்கு, தன் விண்ட் எனர்ஜி டெக்னாலஜி அனுபவம் மட்டும் காரணமில்லை, இந்திய விசா ஈசியாக  கிடைக்கும் என்பதும் ஒரு காரணம். இல்லையன்றால் தன்னை விட திறமையான சீனாவை சேர்ந்த தன் ப்ராஜெக்ட் பார்ட்னெருக்கு அல்லவா இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.

முதல் பயணம் ஏர் இந்தியா விமானத்தில்; வெளிப்புறம் முழுவதும் உள்ளயே தெரியும் படியாக இருக்கும் ஷீத்ரூ விமானம். மெல்லிய கண்ணாடி நுண்ணிளைகளால் வடிவமைக்கப்பட்ட ஃப்யூஸ்லேஜ். மேககூட்டங்களுக்கு நடுவில் அந்தரத்தில் தனியாக பறப்பது போன்ற ஓர் உணர்வு. Detroitல் இருந்து கிளம்பிய ஆறாவது மணி நேரத்தில் இந்திய எல்லை பரப்புக்குள் நுழைந்தது விமானம். கால்களுக்கிடையில் கீழே பார்த்தால் அடர்ந்த காடுகள், ஒவ்வொரு இரண்டு மூன்று நிமிடம் கடக்கும் போதும் பசுமை காடுகளுக்கிடையில் தெரியும் சிற்சில கான்க்ரீட் காடுகள்;

செங்கல்பட்டு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இறங்கியதும் தாய் மண்ணில் கால் வைக்கும் பொழுது ஒரு சிலிர்ப்பு உண்டாகுமே அம்மாதிரி எந்தவித சிலிர்ப்பும் இல்லை. "ஒரு வேலை நாம் அரை இந்தியன் கூட கிடையாதோ" என்று நினைக்க தோன்றியது. "இது என்ன பிதற்றல்", இறங்கும் இடத்துக்கு ஏற்றார்போல வெப்பநிலையை விமானத்துகுள்ளும் கொண்டிருந்ததால் எந்த சிலிர்ப்பும் இல்லை என்று அறிவியல் அறிவு சமாதானபடுத்தியது.

ஒரு மாத வேலை மட்டுமே ஆதலால் அதிக லகேஜ் இல்லை. இங்கிருந்து ஹோட்டலுக்கு செல்லுவதற்கு எந்த ரயில் செல்லும் என்று கைபேசியின் இயங்கு ஸ்க்ரீனில் தேட ஆரம்பித்தவுடன் ஒரு புது மெசேஜ், "உங்கள் விமான டாக்ஸி 400மீ தூரத்தில் உங்களுக்காக வெயிட் செய்கிறது". திரையில் வந்த திசையில் நடந்த்ததில் சரியாக 400மீ தூரத்தில் ஒரு பெரிய ட்ரோன் ரக இருவர் அமரும் விமானம். ஏறி உட்கார்ந்ததும் இன்னொரு மெசேஜ், "செக்குடு இன்டு  தாய்வீடு இன்ன்". எனது புன்னகையை படித்தவாராய் பைலட், "சார் உங்கள் செக்குடு டைம் இங்கிருந்தே கணக்கிடப்படும்" என்றார். இம்முறை ஒரு பெரிய புன்னகை செய்தேன், "நீங்கள் டிப்ஸ் மட்டும் ரூ1000 தந்தால் போதும் சார் டாக்ஸி பில் ஹோட்டல் பில்லோடு சேர்த்து கொள்ளப்படும்" என்றார், அதோடு என் இதழ்கள் புன்னகை பூக்கவில்லை.

இரவு நல்ல தூக்கம்; காலை ஹோட்டலில் இருந்து ரயிலில் வேளச்சேரி ஸ்டேஷன் வந்து இறங்கி அங்கிருந்து மிதிவண்டி மூலம் ஆராய்ச்சி கூடம் வந்தாகிவிட்டது. "சென்டர் ஃபார் விண்ட் எனர்ஜி டெக்னாலஜி" இருப்பது வேளச்சேரி முதல் தாம்பரம் வரை உள்ள மெட்ராஸின் நீளமான பசுமை சாலையில். இச்சாலையின் இடையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் நன்மங்கலம் காப்பு காடு, இதை தவிர சிறு சிறு குடி இருப்புகள் இருந்தாலும் இயற்க்கை மாறாமல் பாதுகாக்கப்படும் சிறப்பு பகுதி. அனைத்து மோட்டார் வாகனங்களும் தடை செய்யப்பட்ட பகுதி. மூவாயிரம் அடி உயரத்தில் செல்லும் புல்லெட் ரயில் தவிர அந்த பாதையில் மிதிவண்டிகளுக்கு மட்டுமே அனுமதி. மெட்ராஸில் மக்கள் தொகையை விட மிதிவண்டிகளின் எண்ணிக்கை அதிகம் என்று படித்ததற்கு விளக்கம் இப்போது கிடைத்தது. அவசர நேரங்களில் இயங்கும் இருவர் செல்லும் விமானம் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும்  அனுமதி இல்லை.

நுழைந்த நொடி முதலே வேலை; புது டீம், புது வேலை, அறிமுகம் என்று எந்த சிறு வினாடியையும் வீணடிக்கவில்லை. ஒரு விதத்தில் எல்லோருமே அறிமுகமானவர்கள் தான். இந்த பத்து ஆண்டுகளில் சில கருத்தரங்குகளில் அவ்வப்போது சந்தித்திருக்கிறோம். ஆதலால் எல்லோரும் தங்கள் வேலையில் மும்முரமாய் இருந்தனர். ஒரு விதத்தில் இயற்கையை கொண்டு இயற்க்கை சீரழிவை தடுக்கும் திட்டம்; இது காற்றின் திசை மற்றும் வேகங்களை ஆராய்ச்சி செய்யும் உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி கூடம்; கடந்த 200 ஆண்டுகள் dataவை கொண்டு ஆராய்ச்சி செய்யும் கூடம். உலகின் அதி உயர காற்று பிடிப்பான்கள், கடலுக்கடியில் காற்றின் தீவிரம் ஆராயும் அதி நவீன கருவிகள். மற்றும் உலகின் தலை சிறந்த காற்று ஆராய்வாளர்கள் மத்தியில் வேலை செய்வது மிகவும் சந்தோசமாக இருந்தது இனியனுக்கு.

இந்த இரண்டு வாரங்களில் ஹோட்டல், ஆராய்ச்சி கூடம் இதை தவிர வேறு எங்கும் வெளியே செல்லவில்லை. வேலையும் சரியாக இருந்தது. இடையிடையே அம்மா போனுக்கு பதில் சொல்வதை தவிர, அம்மாவின் பெரும்பாலான விசாரிப்புகள் வேளச்சேரி, OMR சாலை பற்றியே இருக்கும். ஆனால் அவள் காட்சிபடுத்திய எதுவுமே இங்கு இல்லை என்று கூறும்போது ஒரு சிறு கவலை அவள் முகத்தில் தெரியும். ஆனாலும் அடுத்த வினாடியே அவளுக்கு ஞாபகத்தில் இருக்கும் தி.நகர் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விடுவாள். பிராண்டிங் என்ற காரணத்தை சொல்லி சென்னையை மெட்ராஸ் என்று மாற்றியதில் இந்த மக்களே ஏற்றுக்கொண்டு விட்டாலும் அம்மாவால் மட்டும் ஒத்து கொள்ளமுடியவில்லை. அவள் இங்கு இருந்த போதே இந்த ஆராய்ச்சி கூடம் இதே இடத்தில் இருந்தது என்பதையும் அவளால் நம்ப முடியவில்லை.

இந்த மாதிரி வேலை அதிகம் உள்ள நாட்களில், Detroitல் இருந்த போது Erie lakeன் கரையில் நடந்தால் சில மணி துளிகளில் அலுப்பு தீரும். அதே போல் இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று வாட்ச்மேனை கேட்ட உடன் சிரித்து கொண்டே சார் கொஞ்சம் வெளிய போய் பாருங்க என்று சொன்னார். வெளியே வந்து இடது பக்கம் திரும்பி 200மீ நடந்தால் ஒரு சிறு நடை மேடை, அதை தாண்டினால் பறவைகள் சரணாலயம் என்று ஓர் பேர் பலகை. ID கார்டுடன் சென்றதால் அனுமதி இலவசம். ஏரிக்கு நடுவே 500மீ நடந்த உடன் அவ்வளவு பறவைகள், இது வரை இவ்வளவு விதமான பறவைகளை ஒரே இடத்தில் பார்த்தது இல்லை. க்ர்ரீச் கீச் கீம் என்று ரீங்கார சத்தம் மட்டுமே. 45சதுர கிமீ அளவு பரப்பளவில் இருக்கும் சதுப்புநிலபகுதி அதில் பார்வையாளர்கள் நடந்து செல்ல ஏதுவாக குறுக்கு நெடுக்காக 13கிமீ நீளத்துக்கு இரண்டு பாதைகள். வேலை அலுப்பு இருக்கிறதோ இல்லையோ அன்று முதல் தினமும் ஒரு மணி அங்கேயே பொழுதை போக்கினார் இனியன்.

மூன்றாவது ஞாயிறு இன்று, அடுத்த ஞாயிறு மீண்டும் அமெரிக்கா; இது வரை எங்கும் வெளியே செல்லவில்லை, இன்றும் வெளியே செல்லும் எண்ணமில்லை. உடன் வேலை செய்யும் ஜெர்மன் இஞ்சினியர்கள் அனைவரும் தி.நகர் ஷாப்பிங் சென்று விட்டார்கள். அறுபது வயது அம்மாவை தவிர தனக்கென்று வேறு யாரும் இல்லை. அவளுக்கும் இது போன்ற ஷாப்பிங் பரிசு பொருள்களில் ஈடுபாடு இல்லை. வேறு ஏதாவது வித்தியாசமான அல்லது பாரம்பரியமான பரிசு பொருள் கொண்டு செல்ல விரும்பினார்.

ஹோட்டலில் இருந்து மிதி வண்டியில் ரயில் நிலையம் முடிய வந்து வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து கிழக்கு நோக்கி செல்லும் ஒரு பழைய பாதையில் நடக்க ஆரம்பித்தார், இன்றைய பிளாஸ்டிக் சாலைகளுக்கிடையில் இந்த ஒதுக்கப்பட்ட சாலை கொஞ்சம் குப்பை கூளங்களுடன் வித்தியாசமாக இருந்தது. அப்படி ஒரு குப்பையை தாண்டி நடக்கும் போது ஓரமாக ஒரு மெல்லிய வெளிச்சம், குப்பையை ஒதுக்கி எடுத்தால் அது ஒரு ஆயிரம் ரூபாய் நாணயம். அதிகம் புழக்கத்தில் இல்லாத அந்த நாணயத்தை எடுத்து தன் கைகுட்டையில் சுத்தம் செய்து பாக்கெட்டில் போட்டு கொண்டார். அம்மாவின் coin கலெக்ஷனில் இந்த 1000ரூ நாணயம் இருக்க வாய்ப்பில்லை. இதையே பரிசாக கொடுத்தால் ரொம்ப சந்தோசபடுவாள். மேலும் நடந்து கொண்டே யோசிக்க ஆரம்பித்தார், தான் இதுவரை படித்த இந்தியாவிற்கும் இங்கே காண்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை.  இயற்கையும் செயற்கையும் சம விகிதத்தில் கலந்து செய்த இன்றைய இளைஞர்களின் கனவு தேசம். பத்து ட்ராக்குகளில் செல்லும் பறக்கும் ரயில்கள். இன பாகுபாடு இல்லாமல் எல்லா நாட்டவரும் வாழக்கூடிய சூழ்நிலை. வானுயர வளர்ந்த கட்டிடங்கள், தன் கழிவுகளை தானே சுத்தம் செய்து மறுசுழற்சி செய்யும் தன்னிறைவு பெற்ற கட்டிடங்கள். இவை அனைத்திற்கும் வெகு அருகாமையில் விவசாயமும் நடந்தன. உலகின் 60% சதவிகித உணவு தேவையை இந்தியாதான் பூர்த்தி செய்கிறது.

மெதுவாக நடந்தாலும் எண்ணங்கள் வெகு வேகமாக பின்னோக்கி சென்றன. தன் இரண்டாவது வயதில் ஒரு முறை இந்தியா வந்தது எதுவும் ஞாபகத்தில் இல்லையென்றாலும், தனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த வயதுகளில் அப்பா சொன்ன இந்தியா இப்போது இல்லை. அக்காலங்களில் வளரும்  நாடுகளின் பட்டியல்களின் முதல் நாடாக இருந்தது. ஆனால் அதற்காக நாற்பது ஆண்டுகளில் இந்த வளர்ச்சி அசுர வளர்ச்சிதான். பெண்கள் பாதுகாப்பில் கடைசி, ஊழலில் முதலிடம், பிச்சைகாரர்களை கூட ஒழிக்க முடியாத நாடக இருந்தது. கடந்த இருபத்தைந்து வருடங்களில் உலகில் நடந்த பல இயற்கை மாற்றங்களும் இவ்வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாயின. வட அரை கோளத்தில் இருக்கும் மேலை நாடுகள் பல அழிந்தே விட்டன, மீதமிருக்கும் சில நாடுகளும் எந்தவித கனிம வளங்களும் இல்லாமல் மத்தியதர நாடுகளின் உதவியால் வாழ்ந்து கொடிருக்கின்றன. தண்ணீருக்காக நடக்க விருந்த நான்காம் உலக போரை இந்தியா வெகு சாமர்த்தியமாக நடக்காமல் சமாளித்து உலகின் எழுபது சதவிகித நாடுகளை தனது நட்பு நாடாக்கிகொண்டது. மேலும் சில நல்ல கொள்கை முடிவுகளால் இந்தியாவை சொர்க்க பூமியாக மாற்றிகொண்டது. இருந்தும் கணிப்பொறி தவிர வேறு எந்த துறைகளிலும் கவனம் செலுத்ததால், அனைத்து ஆராய்ச்சி துறைகளுக்கும் மேலை நாடவர்களையே பெரும்பாலும் நம்பி இருக்கிறது. ஆதலால்தான் முடிந்த அளவுக்கு இந்திய வம்சாவளியினர்க்கே வாய்ப்புகளை வழங்குகிறது.

அரை  மணி நேர நடையில் வெகு தூரம் நடந்திருந்தேன், இருட்டியும் விட்டது. வரும்போது இருந்த அமைதி இப்போது இல்லை, பரிச்சயம் இல்லாத மனிதர்கள் சிறு சிறு கூடாரங்கள் அடித்து கொண்டிருந்தனர். கூடாரத்தில் வெளியில் உட்கார்ந்திருந்த இருவர் தன்னை காட்டி ஏதோ சைகையில் பேசியது போல இருந்தது, அனிச்சையாக கால்கள் வேகமாக நடந்தன, முகத்தில் முத்து முத்தாக இருந்த வேர்வை துளிகள் மனதில் இருந்த பயத்தை வெளி காட்டியது. ஓட்டமும் நடையுமாக வந்து ரயில்வே ஸ்டேஷனின் மறு முனையை அடைந்த உடன் தான் நிம்மதியாக இருந்தது. ரூமுக்கு வந்தவுடன் முதல் வேலையாக அம்மாவுக்கு போன் பண்ணி நடந்த அனுபவத்தை சொன்னனேன். "பிச்சைகாரர்களாக இருக்கும், இதுக்கு போய் பயபடுவார்களா" என்று கூறி சிரித்தாள். மேலும் அவள் சிரிப்பில் தான் காட்சி படுத்திய ஒரு விஷயமாவது இருக்கிறது என்ற பெருமை இருந்ததாக தெரிந்தது.

அடுத்த ஒரு வாரமும் சரியான வேலை, அடுத்த இருபது ஆண்டுகளில் வங்காள விரிகுடாவை தாக்கவிருக்கும் மூன்று சுனாமிகளுக்கும் தடுப்பு திட்ட வடிவம் முழுமையடைதிருந்தது. கடற்கரையில் இருந்து எவ்வளவு தூரத்தில் எவ்விதமான மரங்கள் நடப்பட வேண்டும் அதை எவ்வளவு உயரம் செங்குத்தாக வளர்க்க வேண்டும், எவ்வளவு கான்க்ரீட் தூண்கள் அமைக்க வேண்டும், இவைகளால் சுனாமியின் தாக்கம் எவ்வளவு மட்டுப்படும் போன்ற விசயங்களுடன் கூடிய ரிப்போர்ட் சமர்ப்பித்தாகிவிட்டது. நாளை மீண்டும் டெட்ராய்ட் அமெரிக்கா.

காலை ஹோட்டல் மாடியில் அதே விமான டாக்ஸி மற்றும் அதே பைலட். ஏர்போர்ட்டில் இறங்கிய வினாடி "செக்குடு அவுட் ஃப்ரம் தாய் வீடு இன்ன்" மெசேஜுடன் 1லட்சம் INR க்ரெடிட்டர்டு என்ற செய்தியும் வந்தது. பைலட்டுக்கு நன்றியுடன் ஒரு புன்முறுவல் செய்தார். கோர்ட்டை மாட்டியபடியே   ஏர்போர்ட் வாசல் நோக்கி நடந்தவர் ஏதோ யோசித்தவராய் பின்னோக்கி வந்தார். தன் கோர்ட் பையில் இருந்து அந்த 1000ரூ நாணயத்தை எடுத்து வாசலில் அமர்ந்திருந்த பிச்சைகாரர் ஒருவரிடத்தில் போட்டு விட்டு விறு விறுவென உள்ளே சென்றார்.






Saturday, December 20, 2014

மேன் ப்ரபோசஸ் வுமன் டிஸ்போசஸ்

[இந்த குட்டி கதையை படித்து முடிக்க சராசரியாக 7 நிமிடங்கள் ஆகும்]

"உங்க toothpasteல உப்பு இருக்கா" ன்னு மைக் பிடிச்ச பொண்ணு டிவில கேட்டு கொண்டிருந்தாள், தி ஹிந்து கடைசிபக்கத்துக்கு முன் பக்கத்தை பிரித்துகொண்டே "ஆமா உப்ப வச்சி பல் விலக்குனவனெல்லாம் pasteக்கு மாத்திட்டு இப்ப உங்க paste ல உப்பு இருக்கான்னு கேக்குறானுங்க" என்று சொல்லி தன் குழந்தையிடம் இருந்த remoteஐ பிடுங்கி star sports channel க்கு தாவினான் முகிலன்.

அம்மா.............., அப்பாவ பாரும்மா 'மோட்டு பாட்லு'வ மாத்திட்டு கிரிக்கெட் பாக்குறார்ம்மா என்று குழந்தை கத்தியதை கேட்டு முகிலனிடமிருந்து remoteஐ பிடுங்கி(முகிலன் முறைப்பதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல்) குழந்தையிடமே மறுபடியும் கொடுத்தால் அகல்யா.

இவன் முறைத்ததை சாவகசமாக கவனித்து விட்டு, ஆமா விளம்பரத்தை கிண்டல் அடிச்சிட்டு அதே pasteஅ தானே வாங்குறீங்கன்னு அவன் பதிலுக்கு காத்திராமல் kitchenக்குள் நுழைந்தால்.

"நான் ஒண்ணும் அதுக்காக கோவமா இல்ல" - முகிலன்

"தெரியும் தெரியும், எத்தன தடவ எவ்ளோ மோசமா தோத்தாலும் இந்த கிரிக்கெட்ல அப்படி என்னதான் இருக்கோ, அதான் இங்கிலாந்துல நடக்குற மேட்ச்சுக்கு காலைல 5:00 மணிக்கு அலாரம் வச்சி பாக்குரீங்கல்ல  அப்புறம் highlightsயும் பாக்கணுமா என்ன??" - அகல்யா

அய்யோ......, இங்கிலாந்துல நடந்தா 5 மணிக்கு பாக்க தேவைஇல்லை, ஆஸ்திரேலியால நடக்குறதுனாலதான் 5 மணிக்கு எந்திருக்கணும், கொஞ்சம் சிரிப்பு கலந்து நக்கலாக பதில் சொன்னான்.

"தெரியும் தெரியும், எல்லா timezoneஉம் எங்களுக்கும் தெரியும்...........,நீங்க  எல்லா timezone க்கும் whatsappல  மெசேஜ்அனுப்பி chat பண்ணுறதும் தெரியும்......, வீட்டுல ஒரு வேலைக்கு ஹெல்ப் பண்ணுறது இல்லை fullday facebook, whatsapp எதுலயாவது மெசேஜ் அனுப்புறது அல்லது அந்த laptopஅ தூக்கி வச்சிக்கிட்டு எதாவது வேலை செய்யுறது மாதிரி நடிச்சிக்கிட்டு அங்கயும் வெட்டி வேலை பாக்க வேண்டியது" - கடுப்புடன்அகல்யா.

ஒரு சின்ன கிண்டல் வேற ரூபத்துல பிரச்சனையை கொண்டு வருது என்பதை உணர்ந்து மௌனமே இங்கு சரியான ஆயுதம் என்று இருந்தான் முகிலன்.

உலக பிரச்சனைகளுக்கு வேண்டுமென்றால் மௌனம் சரியான தீர்வாக இருக்கலாம், ஆனால் வீட்டு பிரச்சனைகளுக்கு மௌனம் என்பது  எரியிற தீயில எண்ணைய ஊத்துற மாதிரி என்பதை முகிலன் அப்போது அறியவில்லை.

நான் காட்டுகத்தா கத்திட்டு இருக்கேன், நீங்க என்னன்னா அங்க இன்னும் மெசேஜ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க, கத்தியவாறு இவன் phoneஐ பிடுங்கி பார்த்தாள் . நல்ல வேலையாக ஆபீஸ் team memberஇடம் இருந்து வந்த மெசேஜ் ஆக இருந்தததால் அந்த வினாடி தப்பித்தான் முகிலன்.

ஆனால் பிரச்சனை சிறியதாக இருக்கும் போதே அதை தீர்த்தாக வேண்டும் அல்லது அது நம் தலை மேல் ஏறி ஆடும் என்பதை தன் பத்து வருட வேலை அனுபவத்தில் அறியாதவனில்லை முகிலன். தான் படித்த அனைத்து மேலாண்மை மற்றும் நிர்வாக நூல்களின் ஐடியாகளை யோசிக்கலானான். முதல் முயற்சியாய் குழந்தையை நானே பள்ளியில் விடுகிறேன் என்று படித்து கொண்டிருந்த பேப்பரை அப்படியே மடித்து வைத்து விட்டு  bathroomல் நுழைந்தான்.
.
.
.
.

இன்னைக்கு breakfast smell சூப்பர் என்றவாறே டைனிங் டேபிளில் அமர்ந்தவனுக்கு kellogsஐ பார்த்த உடன், அவசரப்பட்டு ஒரு ஐடியா வீணாகிவிட்டதே என்று நொந்தவாறே நாலே ஸ்பூனில் சாப்பிட்டு முடித்தான்.

கணவனின் முயற்சி தோல்வியில் முடிந்ததையும், விக்கி விக்கி kellogs சாப்பிட்டதையும் சிறு புன்னகையுடன் ரசித்தாலும், இன்று அதிகமாகவே முகிலனை கடிந்து விட்டோமே என்று யோசித்த வினாடியில் முகிலன் தன் அனைத்து குடும்ப மேலாண்மை உத்திகளும் பயனளித்தாகவே எண்ணினான்.

 குழந்தையை பள்ளியில் ட்ராப் செய்துவிட்டு ஆபீஸ் வந்தடைந்தவன் முதல் வேலையாக flipkartல் ஒரு லேட்டஸ்ட்(ஏற்கனவே தனக்காக செலக்ட் செய்து வைத்திருந்த) அதிநவீன android phone sameday டெலிவரியில் ஆர்டர் செய்தான், இன்றைக்கு இந்த phoneஐ அகல்யாவுக்கு பரிசளித்து அவளையும் whatzsappல் அறிமுக படுத்தியது மாதிரி இருக்கும் நம்மள  பத்தி குறை சொல்லாத மாதிரியும் இருக்கும். எப்படியும் "இந்த புது போன் எனக்கெதுக்குங்க உங்க phoneஐ நான் வச்சிக்கிறேன், நீங்க இத use பண்ணுங்க" என்று கூறும்  அகல்யாவின் மனதை சரியாக படித்ததாய் எண்ணி தன் காலரை தூக்கி விட்டுக்கொண்டான். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்........

flipkartஐ நாள் முழுதும் தொடர்பு கொண்டு phoneஐ ஒரு வழியாக டெலிவரி பெற்று கொண்டு வீட்டுக்கு சென்று அகல்யாவிடம் surprise giftஆக கொடுத்தான். அகல்யாவும் குழந்தையும் இரு குழந்தைகளாய் அந்த phoneஐ ஆர்வமுடன் பிரித்து விளையாட ஆரம்பித்த சந்தோசத்தில் சீக்கிரமே தூங்கி போனான்.

காலை எழுந்து தன்னுடைய phoneல் whatsapp notification 350msg  என்று இருந்ததை பார்த்தவனுக்கு தலை சுற்றியதில் காரணம் இல்லாமல் இல்லை, எல்லாம் தன் மனைவி அகல்யா அனுப்பி இருந்ததே. நைட் 1மணி முடிய மெசேஜ் பண்ணி இருக்கிறாள், இதில் மொக்க மொக்க ஜோக்கை இவனுக்கு forward வேற பண்ணி இருக்கிறாள்.

"அகல்யா, அகல்யா ......நேரம் ஆயிடுச்சு பாரு எந்திரி..... குழந்தயை ஸ்கூலுக்கு அனுப்பனும் டைம் ஆகுது எந்திரி " - கெஞ்சலாக எழுப்பினான் முகிலன்

நேத்து படுக்க கொஞ்சம் லேட் ஆயுடுச்சுங்க......... குழந்தையும்தான்......., உங்க phoneல game விளையாடிட்டு இருந்தால அதுனாலதான். அவங்க missக்கு whatsappல இன்னைக்கு இவ லீவுன்னு சொல்லி மெசேஜ் அனுப்பிறேன். அப்புறம் கணேஷ்பவனில் whatsappலயே breakfast ஆர்டர் பண்ணிரலாமாம், நானே ஆர்டர் பண்ணிறேன் நீங்க வேகமாய் போய் குளிச்சிட்டு வாங்க என்று இவன் பதிலுக்கு கவனிக்காதவலாய் மெசேஜ் பண்ண ஆரம்பித்து விட்டாள்.

கணேஷ் பவனில் இருந்து வந்த பையனுக்கு பில்லையும் டிப்ஸையும் கொடுத்தனுப்பினான். "ஏங்க அந்த பையனோட friend request accept பண்ணுவீங்களாம், அவன் facebookலயும் ஆர்டர் எடுப்பானாம்" - பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே அகல்யா கூறினாள்.

சாப்பிட்டுக்கொண்டே அகல்யாவிடம் மெதுவாக ஆரம்பித்தான், "என்னம்மா phone எப்படி இருக்கு use பண்ணுறதுக்கு ஈசியா இருக்கா, menuல்லாம் பழக்கமில்லாம கஷ்டமா இருக்குமில்ல?"

"இது என்னங்க பெரிய ராக்கெட் சயின்ஸா, நேத்து ஒரே நாள்ல எல்லாம் ஈஸியா புரிஞ்சிடுச்சு....." - அகல்யா சொல்வதை கேட்டு லேசா தலை சுற்ற ஆரம்பித்தது.

"என்னோட whatsapp friend ஒருத்தி 2.75ghz, 3gb ram configurationல lollypop வெர்சன்ல ஒரு மாடல் வச்சிருக்கலாம் ரொம்ப பீத்திக்கிறா, நீங்க ஆபீஸ்ல போய் ஒரு லேட்டஸ்ட் போன் search பண்ணி உடனே வாங்குறீங்க.....உங்க phone வேற ரொம்ப பழசாயுடுச்சு, நீங்க இத வச்சிக்கோங்க அந்த லேட்டஸ்ட் phoneஐ நான் வச்சிக்கிறேன்......ம் அப்புறம் உங்க அந்த பழைய phoneஐ exchange ஆபர் ல கொடுத்துறாதீங்க அத நம்ம பாப்பாவுக்கு gamesக்கு கொடுத்துறலாம்" - அகல்யா

இவன் தலை கிறுகிறு என்று சுத்தி நின்றதை கவனிக்க நேரமில்லாமல் ஏதோ ஒரு மொக்க வீடியோவை forward பண்ணி அது முகிலனுக்கு டெலிவர் ஆவதையும் இவன் phoneஐ பிடுங்கி confirm பண்ணிக்கொண்டால்.

"நீயல்லாம் எங்க ஆபீஸ்ல வேலை பாத்திருந்தா இந்த நேரம் சீனியர் மேனேஜர் ஆகி இருப்படி" - என்று மனதில் தோன்றியதை வெளியில் சொல்லாமல் ஆபீஸ்க்கு கிளம்பினான் முகிலன்.








Saturday, November 1, 2014

வதந்தி எனும் காட்டுத்தீ

[இந்த  பதிவை படித்து முடிக்க சராசரியாக இரண்டரை நிமிடங்கள் ஆகும், படித்த படி நடக்க அதை விட குறைவான நேரமே தேவை படும்.]

இறுதி எண்பதுகளிலும், தொண்ணுறுகளின் ஆரம்பத்திலும்......அதாவது தூர்தர்ஷன் கோலோச்சிய காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையில் சிறு சிறு கார்ட்டூன் மூலம் பல நல்ல விஷயங்களை மக்களிடையே பரப்புவார்கள்; மின்சாரம் மற்றும் எரிபொருள் உபயோகத்தை குறைப்பது, தண்ணீரை சேமிப்பது, கிராம தூய்மையின் முக்கியம் இவ்வாறு மேலும் பல.

இவற்றில் ஒரு கார்ட்டூன், ஒரு சிறுவன் தன்னுடைய வீட்டில் பலூன் ஊதி விளையாடும் பொழுது, பலூன் வெடித்து விடும்; அதை வெளியே கேட்ட ஒரு நபர் அந்த வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்டதாக மற்றொருவரிடம் சொல்லுவார் பின் அவ்விஷயத்தை கேட்ட அந்த நபர் மற்றொருவரிடம் அந்த தெருவில் ஏதோ வெடிகுண்டு வெடித்ததாக தனது நண்பர்களிடத்தில் சொல்லுவார். அந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு இந்த விஷயத்தை இன்னும் பெரிது படுத்தி, ஒரு ஊரையே அழிக்க கூடிய குண்டு வெடித்ததாகவும், ஊரில் பெரிய கலவரம் நடப்பதாகவும் பலவாறாக வதந்திகளை பரப்புவார்கள். வதந்தியால் விளையும் கெடுதலை மக்களுக்கு உணர்த்துவதற்காக அமைந்த ஒரு சிறு விளக்கப்படம். இந்த கார்ட்டூன் இப்பொழுதும் எல்லா ஊடகங்களிலும் ஒளிபரப்ப வேண்டிய கட்டாயத்தில் இன்றைய தகவல் தொடர்பு உள்ளது. வெறும் வாய் வழியாகவே வதந்தி இவ்வளவு வேகமாக பரவ முடியும் போது, இன்றைய மக்கள் தொடர்பு சாதனங்களான whatzapp, facebook, twitter etc இந்த வதந்திகளை ஒளியின் வேகத்தை விட வேகமாக பரப்புகின்றன.

கடந்த வாரத்தில், ஒரு ஆடியோ பதிவு மற்றும் ஒரு பெண்ணின் போட்டோ.......... துரைப்பாக்கத்தில் திருட்டு சம்பவத்தில் அந்த பெண் ஈடுபடுவதாக வேகமாக பரவியது(இந்த பதிவு எழுதும் பொழுது அந்த ஆடியோ பதிவிக்காக மன்னிப்பு கேட்டு மறு பதிவும் வந்தது ஒரு ஆறுதல் விஷயம்). இவ்வாறான வதந்திகளுக்கு காரணம் என்னவென்றால், செய்திகளை முந்தித்தரவேண்டும் என்ற ஒரு வேகம் தான். ஒரு சிறு send button அல்லது ஒரு like அல்லது share buttonகள் இதை நமக்கு மேலும் எளிமை ஆக்கிவிடுகிறது.

இந்த வேகம் தனி மனிதனிடத்தில் மட்டும்தான் இருக்கிறதா, இல்லை சமுயாத பொறுப்புணர்வு உள்ள பத்திரிகையிலும்(தனி மனிதனை விட அதிகமாக கட்டாயம் அதிகம் இருக்கணும்) இதே வேகம் உள்ளது. மேல் சொன்ன அதே பதிவு மறுநாள் ஒரு தமிழ் நாளிதழிலும் வந்தது(அவ்விசயத்தையும் whatzapp அனுப்பினோம், பத்திரிகைகாரன் பொய் சொல்ல மாட்டன் என்று நினைத்து) . இது மட்டுமல்ல, சமீபத்திய ஒரு ஜாமீன் வழக்கின் தீர்ப்பை முழுதாக சொல்வதற்குள், செய்திகளை முந்தித் தர வேண்டும் என்ற ஒரே நோக்கில் தவறான செய்தியை பரப்பின அனைத்து செய்தி நிறுவனங்களும்(பின் அச்செய்திகளுக்காக சிறு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை)

செய்தி நிறுவனங்களின் அலட்சியத்தின் இன்னொரு எடுத்துகாட்டு http://www.thenewsminute.com/news_sections/1818. சரி அத விடுங்க அவங்க என்னவேனா பண்ணட்டும், நாம நம்ம sideல இருந்து இந்த மாதிரி வதந்திகளை பரப்பாமல் இருக்க சில விசயங்களை follow பண்ணாலே போதும், எந்த ஒரு விசயத்தின் நம்பகத்தன்மையில் சிறு சந்தேகம் இருந்தால் கூட அதை பரப்பாமல் இருக்கலாம், ஒரு தப்பான விஷயத்தை பகிர்வதை விட நமக்கு  தெரியாத ஒரு நல்ல விஷயத்தை பகிராமல் இருப்பதே மேல்.





Saturday, October 25, 2014

விமர்சனங்கள் (விமர்சகர்கள்)

 [இந்த பதிவை படித்து ரசிக்க சராசரியாக 2.5 நிமிடங்கள் ஆகும்]

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் மிகவும்  விமர்சிக்கப்பட்ட(கேலி செய்யப்பட்ட) இரு வெவ்வேறு நபர்கள்,
 நீயா நானா கோபிநாத்
அஞ்சான் டைரக்டர் லிங்குசாமி

தனது talk show ல் மருத்துவ தொழிலிலை மிகவும் கேவலமான கருத்து தெரிவித்ததர்க்க்காக கோபிநாத்தையும், ஓடாத ஒரு படத்தை பற்றி படம் வருவதற்கு முன்னரே கொடுத்த பில்ட் அப் க்காக லின்குசாமியையும் எவ்வளவு ஓட்ட முடியுமோ அவ்வளவு ஓட்டிருக்காங்க.

சமூக வலைத்தங்கள் தங்கள் பணியை வெகு சிறப்பாக செய்து  இந்த கேலி கிண்டல்களை வலைத்தளங்களில் பரப்பின. ஆனால் ஏனோ லிங்குசாமியின் கிண்டல் பதிவுகளை போல் கோபிநாத் பற்றிய ஆடியோ பதிவை ரசிக்க முடியவில்லை.

ஏனென்றால், லிங்குசாமியின் படைப்புகளை அந்த பதிவுகள் விமர்சிக்க வில்லை, மாறாக அவரின் பேட்டியை(மொத்த வித்தையை இறக்குனதை......) மட்டுமே விமர்சித்தன. அவரின் பழைய படங்களை பற்றியும் இந்த அஞ்சான் படத்தை பற்றியும் கூட ஒரு கருத்தும் சொல்லவில்லை, கிண்டல் பதிவுகளின் குறிக்கோள் அவருடைய பேட்டியை மட்டுமே தாக்குவதாக இருந்ததது.

ஆனால், கோபிநாத் பற்றிய ஒரு ஆடியோ பதிவு (ஒரு டாக்டர் தயாரித்தது ) , கோபிநாத் என்ற ஒரு தனி நபரையும் அவர் சார்ந்த விஜய் டிவியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்க பட்டது. இது மருத்துவ தொழிலை விமர்சித்து கருத்து தெரிவித்ததற்காக இது பதில் பதிவா?? ஏன் இவ்வாறு வேறு எந்த தொழிலையும் யாரும் விமர்சித்து கருத்து சொன்னது இல்லையா, போலீஸ் தொழிலையும், கால் சென்டர் வேலையும் இது வரைக்கும் talk show ல் விமர்சித்தது விட இது ஒன்றும் மோசமாக விமர்சிக்கவில்லை, அதற்கு பதிலாக ஒரு போலீஷோ அல்லது கால் சென்டர் employeeஓ கீழ்த்தரமான மறுப்பு விமர்சனம் கொடுத்ததும்  இல்லை. அந்த ஒரு ஆடியோ பதிவு மட்டும் இல்லை, இது போன்ற நிறைய வீடியோ பதிவுகள் youtubeலும்(ஆனால் அது எல்லாம் கொஞ்சம் நாகரிகமாகவே இருந்தது). இதை எல்லாம் வச்சி பார்க்கும் போது டாக்டர்ஸ் இந்த நிகழ்ச்சிய இவ்ளோ நாள் ரொம்ப பர்சனல்லா ரசிச்சி பாத்திருபாங்கன்னு நினைக்கிறேன்.

Talk showவ, ஷோவா மட்டுமே பாத்திருந்தா இவ்வளவு காட்டம் இருந்திருக்காது, அத விட்டுட்டு கோபிநாத்தை ஒரு புரட்சியாளனாகவும், தலைவனாகவும், இவ்வளவு நாள் கொண்டாடிட்டு நமக்கு எதிரா ஒரு கருத்து சொன்னா இப்படிதான் கோபம் வரும். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு டாக்டர் விஜய் டிவி யின் எல்லா ப்ரோக்ராமையும் விடாம பாக்குறதுக்கு டைம் இருந்த்துருக்குமா?? ஏன்னா அந்த ஆடியோ பதிவு ஒரு ப்ரோக்ராம் விடாம எல்லாத்தையும் பாத்திருந்தா மட்டும்தான் இவ்வளவு விமர்சிக்க முடியும்.

இதை வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் லிங்குசாமியை விமர்சித்தது அனைவரும் engineerகள்(கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்திருப்பவர்கள்), கோபிநாத்தை விமர்சித்தவர்கள் டாக்டர்கள். ஒரு வேலை இதை அந்த டாக்டர் ஒரு engineerட்ட outsource பண்ணிருந்தா நகைச்சுவையாகவோ நாகரிகமாகவும் விமர்சித்திருந்திருக்கலாம்.

இந்த பதிவு வெறும் நகைச்ச்வைக்காக எழுதப்பட்ட என் தனிபட்ட  கருத்து மட்டுமே(குறிப்பாக டாக்டர்களை கிண்டல் அடிப்பதற்காக அல்ல ), அப்புறம் யாரவது ஒரு டாக்டர் இத படிச்சிட்டு blog எழுதும் மொத்த எஞ்சினியர் சமுதாயத்தையும் கிண்டல் அடிச்சி நீங்க கட்டுன பாலம் ஒழுங்கா நிக்குதா, கட்டிடம் இடியாம நிக்குதா, அல்லது  SW defect இல்லாம இருக்கன்னு மறு பதிவு போட்டுற போறாங்க.











Sunday, September 21, 2014

ஓர் இரவு வாழ்க்கை...


[இந்த பதிவ படித்து முடிக்க சராசரியாக நாலு நிமிடங்கள் ஆகும் ]



நடுநிசி இரவு பன்னிரெண்டு மணி, ஆள் அரவம் இல்லாத அந்த அறையில் யாரோ தன்னை பேர் சொல்லி அழைப்பது போல் கேட்டது.

ராம்,
டேய் ராம்,
டேய் ராம் எந்திரிடா...........

சரி சரி இது ஏதோ, ராஜா ராணி....., ஒரு ஊர்ல ஒரு பெரிய........ இப்படி ஏதோ ராமு, சோமு கதைன்னு நினைக்க வேண்டாம். இது மின்னணு உபகரணங்களில் இருக்கும் வன்பொருள், மென்பொருள்களுக்கு இடையில் நடக்கும் சிறு உரையாடல்.

அய்யோ......தமிழ் பதிவுன்னு சொல்லிட்டு இப்படி எழுதுனா எப்படி புரியும் உங்களுக்கு? இதோ தமிழ்லேயே சொல்லுறேன். electronic gadgetsல்  இருக்கும் hardware மற்றும் software பேசிக்கொள்ளும் சிறு உரையாடல்.

RAM,
டேய் RAM,
டேய் RAM எந்திரிடா........

RAM :  என்னடா EEPROM, என்னைய கொஞ்ச நேரம் கூட தூங்க விட மாட்டியா? நான் உன்ன மாதிரி ஒண்ணும் வெட்டி பய கிடையாது, நேத்து fulla ஒரே வேலை.....இந்தா beer அடிச்சிட்டு தூங்கிட்டு இருக்கானே இந்த நாதாரி ஒரு program கூட விடாம எல்லாத்தையும் download பண்ணி வச்சிக்கிட்டு எல்லா programயும் நோண்டிட்டே இருக்கான். இதுல இடைல whatsapp, facebook சாட்டிங் வேற. ஒரு நிமிஷம் என்ன தூங்க விட மாட்டேங்குறான்.

EEPROM alias NVM  : சரி சரி அப்படியே சைக்கிள் கேப்ல உன் புகழ் பாடுற பாத்தியா!!! charge போயிட்டாவது நீ தூங்கிக்கலாம், ஆனா என்ன பாரு இந்த phoneஐ தூக்கி கட்டைல போறது முடிய நான் வேலை பாத்தாகணும்.

ROM alias FLASH : டேய் மாப்பிளைகளா, என்ன ஓவரா உங்க புகழாவே பாடிட்டு இருக்கீங்க, நான் இல்லன்னா அப்புறம் உங்களுக்கு எதுடா வேலை!!! எல்லா programயும் ஸ்டோர் பண்ணிட்டு நான் எவ்ளோ அமைதியா வேலை செய்றேன்.

ROM : இதுல இந்த பய புள்ள திடீர்னு எதாவது OS version மாத்துரேன்னு புது OS install பண்ணுவான் அப்புறம் factory reset பண்ணுறேன்னு எதாவது சொதப்பிட்டு திருப்பி flash பண்ணுவான்.

NVM : ஆமா அப்போ configuration சொல்லிட்டு எனக்கும்தான் வேலை இருக்கும்.


RAM: ஹலோ, எங்களையும் தான் download speed சரியல்லைன்னு டார்ச்சர் பண்ணுவாங்க. நான் மட்டும் speedஆ ரைட் பண்ணலைன்னா உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.


(அப்போ அங்க இன்னொரு சத்தம் கொஞ்ச கட்ட குரல்ல......என்னடா அங்க சத்தம் .....................பேசினது வேறு யாரும் இல்ல நம்ம CPU தான்)

RAM/ROM/NVM (கோரஸாக): சும்மா பேசிக்கிட்டிருந்தோம்........

RAM : ஆமா CPU ன்னா இவர் மட்டும் என்ன கொம்பா?? இவனும் நம்மள மாதிரி வெறும் memory தாண்டா!!! program counter, stack , ALU, registers அப்படின்னு வேற வேற பேர் வச்சிட்டு இருக்கான், ஆனா எல்லாமே memory தான்.

(CPU யோட கட்ட குரல் நம்ம ANDROID யும் எழுப்பி விட்டுருச்சு)

ANDROID: சரியா சொன்னடா, நீங்கல்லாம் வெறும் memory தான். உங்களுக்கு dataவ கொடுத்து உங்கள வேலை செய்ய வைக்கிறது நாங்கதான்.

NVM : அப்பு, நீ வெறும் program தான், உன்ன மாதிரி தான் windows ன்னு ஒருத்தன் பெரிய படம் போட்டுட்டு இருந்தான் இப்ப அவன் நிலைமைய பாத்தில....

ANDROID : அய்யோ, வெளிய இருக்குறவன் தான் விவரம் தெரியாம பேசுறான்னா நீயுமா?? நானோ windows, linux , iOSஓ ....இன்னும் எத்தனை programஓ......எல்லாம் compile பண்ணி build பண்ணிட்டா வெறும் zeroes and ones மட்டும்தான். நீங்க எல்லாம் அந்த zeroes and ones வச்சி output தர்ற வெறும் memory device அவ்ளோதான்.

ROM : சரி சரி இத சத்தமா சொல்லாத, அப்புறம் இந்தியாகாரன்லாம் zeroவ கண்டுபிடிச்சது இந்தியன்தான் சொல்லி ஒரு postingஅ போட்டு அதுக்கும் லைக் போட்டு நம்மள இன்னும் கொன்னு எடுப்பாங்க.

RAM/ROM/NVM (கோரஸாக):ஹா ஹா ஹா ...........

ANDROID : ஏய் அவனுங்கள லைக் வாங்குறதுக்கு மட்டும் வேலை செய்யும் ஆளுகன்னு தப்பா நினைச்சிடாத, நம்ம சொல்லுற சாதாரண zeroes and ones வச்சி எவ்ளோ achieve பண்ணிருக்காங்க தெரியுமா??

ROM : ஓ தெரியுமே!!!இந்தா  நமக்கெல்லாம் உயிர் வந்து பேசிக்கிற மாதிரி இந்த program எழுதுனது கூட மப்பு கலைஞ்சும், இன்னும் தூங்கிட்டு இருக்கனே இவன்தான் பெரிய ஆள்தாம்ப்பா.

NVM : டேய்  நம்ம பேசிக்கிற சத்தம் கேட்டு இவன் எந்திரிக்கிற மாதிரி இருக்கு.

ANDROID : அய்யோ, எதுக்கு எல்லா file யும் select பண்ணுறான்?? ஐயையோ இவன் விரல்கள் shift + del அமுக்..............


NVM: ஆ ஊ ~வ ஃ க்கோ @##$$%^&&**((((







Sunday, September 7, 2014

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

ரேஷன் கடையில் வரிசையில் நின்று மண்எண்னை மற்றும் தீபாவளிக்கு டால்டா வாங்கியவர்கள்;

பஞ்சாயத்து டிவில் ஒலியும் ஒளியும் மற்றும் ஹிந்தி படம் பார்த்தவர்கள்;

வருடம் முழுதும் டவுன் பஸ்ஸில் மட்டுமே சென்றாலும்  குடும்பத்துடன் துணிக்கடை செல்லும் நாட்களில் மட்டும் பந்தாவாக சைக்கிள் ரிக்சாவில் சென்றவர்கள்;

பொருட்காட்சியில் முதன்முதலாக  ஒரு சிக்கன் 65 வாங்கி குடும்பமே பங்கிட்டு சாப்பிட்டவர்கள்;

டூயுவில் சட்டர் போட்ட சாலிடர் டிவி வாங்கி, வரும் ஞாயிறு என்ன படம் என்று  சொல்வார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எதிரொலி பார்த்தவர்கள்;

ஒரு முறை  சென்னை சென்று வந்ததையே வருடம் முழுதும் பேசியவர்கள்;

எஞ்சினியரிங் என்றால் சிவில் எஞ்சினியர் மட்டுமே நினைத்தவர்கள்;

ஐந்து வருடத்திற்கு முன் எழுதி வைத்த போன் கனெக்ஷன் கிடைத்த  மகிழ்ச்சியில் எல்லா சொந்தத்துக்கும் பேசி விட்டு மாத கடைசியில் பில் வந்ததும் போனுக்கு பூட்டு போட்டவர்கள்;

மற்றும் இது போல் பலரை காணவில்லை. இவர்களிடத்தில்  காசு பணமிருந்ததில்லை அதே நேரத்தில் கவலையும் இருந்தததில்லை.

                  இவர்கள் எப்பொழுது முதல் காணாமல் போனார்கள் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. வேலை,பணம், குடும்பம் தேடுதல்  மற்றும் கால ஓட்டங்களில் காணமல் போயிருப்பார்கள் என்று சந்தேகிக்கபடுகிறது, இறுதி 90களில், மற்றும் உலகமயமாக்கல் பொருளாதர வளர்ச்சியில் காணாமல் போயிருக்கலாம் என்ற ஒரு பரவலான கருத்தும் உண்டு. இவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்ற விவரமே வேலை வெட்டி இல்லாத நேரங்களில் அல்லது டிவியில் பட்டிமன்றம் பார்க்கும் போது  மட்டும்தான் தெரிய வரும். மற்ற நேரங்களில் இவர்களை தேடக்கூட ஆள் இருக்காது. இவர்களை  பற்றிய விவரம் அறிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி, அளவுக்கு அதிகமாக பணமிருந்தும் அதை அனுபவிக்க நேரம் கிடைக்காத(அல்லது ஒதுக்காத) எவரிடமும் தெரிவிக்கலாம்.

வீட்டிற்க்கு ரெண்டு கார் இருந்தும், அதில் குடும்பத்தோடு ஊர் சுற்ற நேரமில்லாதவனும்;
பிடித்த உணவை விட பிடிக்காத மாத்திரையை அதிகம் சாப்பிடுபவனும்;
42" இன்ச் டிவி வாங்கியும், அதை பார்க்க நேரமில்லாதவனுக்கும்தான்  இவனை கண்டுபிடிக்க வேண்டியது இப்போது அவசியமாகிறது.

                 இவர்களை தேடுவதை விடுத்து அவர்கள் தொலைந்த காலங்களை தேடுவதை விடுத்து நமது சரியான சந்தோஷம்(நிச்சயம் பணமாக இருக்காது) எது என்று தேடினாலே, தானாக இவர்கள் கிடைப்பார்கள்.